ஹிப்ஹாப் ஆதியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்.: இருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை

சென்னை: ஹிப்ஹாப் ஆதியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனைவூரில் ஹிப்ஹாப் ஆதியின் வீடு உள்ளது. இவர் ஹிப்ஹாப் பாடல்களை படி பிரபலம் ஆனவர். மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோ-வாக நடித்துள்ளார். மேலும் பல படங்களுக்கு இவர் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி வீட்டின் கதவில் மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரது வீட்டின் கதவு சேதமைந்துள்ளது. இந்த தாக்குதலை நேரில் பார்த்த சிலர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர். காவல்துறையினர் அங்கு வருவதை அறிந்த அந்த மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பித்துள்ளனர்.

பின்னர் அக்கம், பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கார் பதிவெண்ணை கண்டுபிடித்தனர். அதனை வைத்து காரின் உரிமையாளரான அஜய் வாண்டையார் என்று கண்டுபிடித்து, அவரின் வீட்டிற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.  

அந்த விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டது அஜய் வாண்டையாரின் ஆக்டிங் டிரைவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வடபழனியை சேர்ந்த பிரேம்குமார் (24),  மதுரையை சேர்ந்த அர்ஜூன் (24) ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், ஹிப்ஹாப் ஆதியின் வீடு என்று தெரியாமல் குடிபோதையில் இதனை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: