இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் கட்டணமில்லாப் போட்டித் தேர்வு பயிற்சி

சென்னை: போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் தொடர்பாக சென்னையில் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் ( TNPSC, SSC, IBPS, RRB etc) போட்டித் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. 24-07-2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ள  TNPSC -Group IV  தேர்வில்  கலந்து கொள்ளும்  தேர்வர்களுக்கு  தமிழக அரசின் சார்பில்  போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தால்  கட்டணமில்லாப் பயிற்சி,  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள  சர் தியாகராயா  கல்லூரி மற்றும்  நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில்  பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 வரை  மூன்று மாதக் காலம் நடைபெற உள்ளது.   மேற்படி பயிற்சிக்கு  குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி  பெற்றிருப்பதோடு மேற்படி தேர்விற்கு  விண்ணப்பித்திருக்க வேண்டும்.

மேற்படி போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில்  உணவு  மற்றும் தங்கும் வசதிகள் இல்லை. மேலும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள  சர் தியாகராயா  கல்லூரி மற்றும்  நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி  ஆகிய இடங்களில்  முறையே 500  மற்றும் 300 தேர்வர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக   27-04 - 2022 முதல் 11 - 05 - 2022      வரை விண்ணப்பிக்கலாம்.  மேலும், பயிற்சியில் சேரவிரும்புபவர்கள் தங்கள் கல்வி மற்றும் வயது ஆகிய தகுதிகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு தேர்வாணையக் குழுவின் இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.  பத்தாம்  வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தேர்வர்கள் விபரம்  விரைவில் வெளியிடப்பட்டு, இனவாரியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப நேரடியாகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். மே மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: