சத்தியமங்கலத்தில் டிரோன் மூலம் கரும்பு பயிருக்கு களைகொல்லி தெளிப்பு-விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தில் டிரோன் மூலம் கரும்பு பயிருக்கு களைகொல்லி தெளிப்பு விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. நேரம் மற்றும் ஆட்கூலி மிச்சமாவதாக விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி சுற்றுவட்டார  பகுதிகளில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்படுகிறது. இங்கு விளையும் கரும்பு  வெட்டப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு  அனுப்பப்படுகிறது.

கரும்பு பயிரில் களைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பவர்  ஸ்பிரேயர் பயன்படுத்தி மருந்து தெளித்து வந்தனர். மருந்து தெளிப்பதற்கு  அதிகம் செலவாகிறது என விவசாயிகள் கூறியதால், பண்ணாரி சர்க்கரை ஆலை மற்றும்  பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி சார்பில், ஆளில்லா விமானம் (டிரோன்)  பயன்படுத்தி கரும்பு பயிருக்கு களைக்கொல்லி மருந்து தெளிப்பது குறித்து  விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

 டிரோன்  பயன்படுத்தி கரும்பு பயிருக்கு மருந்து தெளிப்பதன் மூலம் ஆள் கூலி மற்றும்  நேரம் மிச்சம் ஆவதோடு குறைந்த அளவிலான மருந்து மற்றும் தண்ணீரை பயன்படுத்தி  அதிக பரப்பளவில் மருந்து தெளிக்க முடியும் என்பதை அதிகாரிகள்  செயல்விளக்கம் மூலம் விவசாயிகளுக்கு செய்து காட்டினர். இதில், கரும்பு  பயிரில் களைக்கொல்லியை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.  டிரோன் பயன்படுத்தி களைக்கொல்லி தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கு விவசாயிகள்  வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories: