கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து கலெக்டர்களுக்கு கடிதம்

சென்னை:  தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் தான் உள்ளது, ஆனாலும் மக்கள் அலட்சியமாக இல்லாமல் கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள் அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தொற்று உறுதியானால் மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், தொற்று இல்லை என முடிவு வந்தால் தொடர்ந்து உடல்நிலையை சுய கண்கானிப்பு செய்து கொள்ள வேண்டும்.

அனைத்து அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி குறைந்த அளவே செலுத்தி வரும் இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வலர்கள்,குடியிருப்பு நலசங்கத்தினர் உதவியுடன் தடுப்பூசி அதிகளவில் செலுத்த முயற்சி எடுக்க வேண்டும்.மாவட்ட அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை விகிதத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவையான மருத்துவ கட்டமைப்புகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும். பரிசோதனைகளை மரபணு பகுப்பாய்விற்கு அனுப்பு வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் தான் உள்ளது, எனினும் மக்கள் அலட்சியமாக இல்லாமல் கவனத்துடன் இருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: