சென்னை: பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் சங்கம் சார்பில் 609 உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்பக்கோரி நாளை முதல் 3 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் கடந்த 8 ஆண்டுகளாக உதவி பொறியாளர்கள் பதவி உயர்வு வழங்கப்படாமல் வழக்கை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், உதவி செயற்பொறியாளர் பணியிடங்களை நிரப்பும் வகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீர்வளத்துறையில் உதவி செயற்பொறியாளர் 363 பணியிடங்களும், பொதுப்பணித்துறையில் 244 பணியிடங்களும் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் விரைவில் இந்த மதிப்பீட்டை வைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.