கும்பகோணம்: தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே முழு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒன்றிய தொகுப்பில் இருந்து முறையாக நிலக்கரியை கொடுக்காதததால் தான் மின்வெட்டு ஏற்படுவதாக கூறியுள்ளார். கும்பகோணத்தில் காங்கிரஸ் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; மாநில அரசுகளுக்கு ஒதுக்க வேண்டிய நிலக்கரியை ஒன்றிய அரசு ஒதுக்காததே தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு தலையாய காரணம் என்று கூறினார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான அறிக்கை அளிக்க உள்ளதாக தெரிவித்த கே.எஸ்.அழகிரி 8 மணி நேரத்திற்கு தேவையான அளவு நிலக்கரி மட்டுமே தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.