வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதந்த மீன்களை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம்-குப்பைகளையும் அகற்ற கோரிக்கை

வேலூர் : வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதந்த மீன்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். அகழியில் உள்ள குப்பைகளையும் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கோட்டையை சுற்றிலும் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹33 கோடி மதிப்பீல் கோட்டையை சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

கோட்டையின் உட்புறம் நடைபாதை, குடிநீர் வசதி, கேன்டீன் வசதி, உணவருந்தும் வசதி, அலங்கார மின்விளக்குகள், ஒளி ஒலி அரங்கம், கோட்டை அகழியை தூர்வாருதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அகழி தூர்வாருதல், கோட்டைக்குள் சாலைப்பணிகள், விளக்குத்தூண்கள் என ஒரு சில பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கோட்டை அகழியின் வடகிழக்கு மூலை தொடங்கி வடமேற்கு மூலை வரையும், கோட்டை நுழைவு வாயிலின் இருபுறமும் பொதுமக்களும், மக்கான் பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்களின் கழிவுகளும் அகழியில் கொட்டப்பட்டு அகழி தண்ணீர் கழிவுநீராக மாறியது. இச்சூழலில் அகழியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசியது. அதன்பிறகு மீண்டும் மீன்கள் இறந்து மிதந்தன.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் 2 நாட்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக செத்து மிதந்த மீன்களை மாநகராட்சி நிர்வாகத்தினர் நேற்று மீனவர்களை வைத்து அகற்றினர். படகுகளில் சென்று அழுகிய நிலையில் மிதந்த மீன்களை அகற்றினர். இந்த பணி இன்று வரை நடக்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தொல்லியல் துறை சார்பில் அகழியில் மிதக்கும் குப்பைகளையும், கழிவு பொருட்களையும் அகற்ற வேண்டும். அதோடு அகழியில் கழிவுநீர் திருப்பி விடுவதையும், குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்க கேமராக்கள் அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: