சென்னை: ஸ்பெயின் நாட்டில் உள்ள லாரோடாவில் சர்வதேச அளவிலான 48வது ஓபன் அஜெட் ரஸ் சதுரங்கப்போட்டி நடந்தது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து 193 சதுரங்கப் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், சென்னை மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவன் கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் முதல் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.
மேலும் இவர் 7.0 புள்ளிகளுடன் பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் களமிறங்கி இஸ்ரேலிய சதுரங்க வீரர் ஜிஎம் விக்டர் மிகலெவ்ஸ்கியை தோற்கடித்து 8 புள்ளிகளுடன் இறுதிப் போட்டியில் 9 சுற்றுகளில் ஆட்டமிழக்காமல் முதலிடம் பிடித்தார். இவர், உலகின் முதல் 100 தரவரிசைப் பட்டியலில் நுழைவது உறுதி என்று இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். குகேஷின் சானையை பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.