சிதம்பரம் கோயில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் குறித்து அரசு தான் முடிவு எடுக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை : கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள், கனகசபை மண்டபத்தில் இருந்து தரிசனம் மேற்கொள்ள அனுமதி கோரி கடலூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகத்தான் கனகசபை மண்டபத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை’ என்றார். இதையடுத்து, கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து தமிழக அரசு தான் முடிவு எடுக்கும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

Related Stories: