சென்னையில் உள்ள ரயில் நிலையத்தில் வாயில் கத்தியை வைத்து ‘ரீல்ஸ்’ செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு: 4 பள்ளி மாணவர்களிடம் விசாரணை

சென்னை: சென்னையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் வாயில் கத்தியை வைத்தபடி ‘ரீல்ஸ்’ செய்து, அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த பள்ளி மாணவர்கள் 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த சிறுவர்கள் 4 பேர் பள்ளி சீருடையில் வாயில் கத்தியுடன் ரயில் நிலையம் ஒன்றில் நடந்து வந்தபடி ‘ரீல்ஸ்’ செய்துள்ளனர்.

அதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ வீடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் 4 பள்ளி மாணவர்கள் என தெரியவந்தது. உடனே வீடியோ பதிவு மூலம் 4 பள்ளி மாணவர்களையும் கீழ்ப்பாக்கம் போலீசார் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக பள்ளி மாணவர்களின் பெற்றோரை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்து கடிதம் எழுதி வாங்கி அவர்களுடன் 4 சிறுவர்களையும் அனுப்பி வைத்தனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் ‘ரீல்ஸ்’ பக்கத்தில் இருந்து அந்த வீடியோவையும் போலீசார் அழித்தனர். இதுதொடர்பாக 4 பள்ளி மாணவர்கள் படித்து வரும் பள்ளி முதல்வருக்கு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

Related Stories: