மகளை ஒருதலையாக காதலித்ததை கண்டித்த தந்தை மீது நாட்டு வெடி வீசி கொல்ல முயற்சி: யூடியூப் பார்த்து தயாரித்த 23 வெடிகளுடன் மெக்கானிக் கைது

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மகளை ஒருதலையாக காதலித்ததை கண்டித்த தந்தை மீது நாட்டு வெடி வீச முயன்ற மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் கவுல்பாளையத்தை சேர்ந்த ராஜ் மகன் தனபால்(24). டூவீலர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 9ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததோடு, அவரை பார்க்கும் சமயங்களில் கேலி கிண்டல் செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தனபாலின் பெரியப்பாவிடம் கூறியதால், அவர் ஒரு வாரத்திற்கு முன்பு தனபாலை கண்டித்தார்.

இந்நிலையில் தனபால் நேற்றுமுன்தினம் இரவு அந்த மாணவியின் வீட்டின் அருகே தொடர்ந்து நடந்து போவதும், வருவதுமாக இருந்தார். இதனைப்பார்த்த மாணவியின் தந்தை மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் தனபால் வீட்டிற்கு சென்று கண்டித்தனர். அப்போது தனபால் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடியை மாணவியின் தந்தை மீது தூக்கி வீச முயன்றார். இதனை அவரது தம்பி நந்தகுமார் தடுத்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சென்று விசாரணை நடத்தியதில், வெடி எப்படி தயாரிப்பது என்பது பற்றி யூ டியூப் பார்த்து அதன்படி கரித்தூள், கூழாங்கல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வெடிகளை தனபாலே தயார் செய்து வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 நாட்டு வெடிகளை போலீசார் கைப்பற்றி தனபாலை கைது செய்தனர்.

Related Stories: