அம்பத்தூர்: சென்னை அடுத்த சோழவரம் நூலகம் தெரு பகுதியை சேர்ந்தவர் மோகன் (43, பெயர் மாற்றம்). இவரது வீட்டின் அருகே வசிப்பர் டேவிட் (26). கூலி வேலை செய்து வருகிறார். இவர் குடிப்பழக்கம் உடையவர். அடிக்கடி குடித்து விட்டு ரகளை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக குடிபோதையில் மோகன் வீட்டின் கதவை தட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். உச்சக்கட்டமாக 10ம் வகுப்பு படித்து வரும் மோகனின் மகளை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
மேலும் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மகள், தந்தையிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை மோகன் தட்டி கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். அதற்கு பிறகும் தொல்லை கொடுத்துள்ளார் டேவிட். இதனால் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்கள். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், டேவிட் மீது நடவடிக்கை எடுக்கும்படி சோழவரம் போலீசில் நேற்று மோகன் புகார் செய்தார்.
இது, பாலியல் தொடர்பான வழக்கு என்பதால், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சோழவரம் போலீசார் மாற்றினர். இதையடுத்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை அழைத்து விசாரணை நடத்தினர். இதில், சிறுமிக்கு, டேவிட் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் டேவிட்டை மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.