காட்பாடியில் அதிகாலை சோதனை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர் : காட்பாடி ரயில் நிலையத்தில் அதிகாலை நடத்திய சோதனையில், எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 15 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கஞ்சாவை முற்றிலுமாக கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்காக கஞ்சா ஆபரேஷன் 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளூர் போலீசார், தமிழக ரயில்வே போலீசார், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என மாநிலம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்கின்றனர். மேலும் இவற்றை கடத்தி விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹாதிய ரயில் நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலம் யஸ்வந்த்பூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தது. இந்த ரயிலில் காட்பாடி ரயில்வே இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில் தலைமை காவலர் சண்முகசுந்தரம், முதல்நிலை காவலர் நரேந்திரகுமார், காவலர் தேவேந்திரன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

அப்போது, எஸ்-1 கோச்சில் உள்ள கழிவறை அருகே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 2 பைகள் இருந்தது. அதை போலீசார் சோதனை செய்தனர்.

அதில், 24 பாக்கெட்டுகளில் 15 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தியது யார்? எங்கிருந்து கடத்தி வருகின்றனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை பஸ்சில் 10 கிலோ கஞ்சா சிக்கியது

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தமிழக- ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் வேலூர் மண்டல மத்திய கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், எஸ்ஐ சங்கர் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12.30 மணியளவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பதியில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற அரசு பஸ்சை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ஒரு பயணி வைத்திருந்த பையை சந்தேகத்தின்பேரில் சோதனை செய்தனர். அப்போது 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தியதில், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகில் பிர்லா மதாதரா பகுதியை சேர்ந்த ராம்பாபு(27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: