ஸ்டெர்லைட் ஆலையில் அபாய கழிவு அகற்றம்? மாசுகட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் கிடக்கும் அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஆலை மூடப்பட்டது. இந்நிலையில், அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆலையை இடிக்க கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆலை வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் அபாயகரமான கழிவுகளால் அப்பகுதியில் மண் மாசடைந்து விட்டதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆலை நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செம்பு கழிவுகள் அபாயகரமானதா, இல்லையா என்பதை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தீர்வு நடவடிக்கை என்ன என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்க வேண்டும். நான்கு வாரங்களில் இது சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: