மேற்கு தொடர்ச்சி மலையில் அந்நிய மரங்களை அகற்ற தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியை பயன்படுத்தலாமா? ஒன்றிய அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்கள் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என்று ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், வேலையே செய்யாமல் வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊதியம் வழங்குவார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் அந்நிய மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம். வேலை உறுதி திட்டத்தின் நிதியை பயன்படுத்தும் போது அது அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலையில் மலைவாழ் மக்கள் மூலம் அந்நிய மரங்களை அகற்ற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தலாமா என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Stories: