கடல் அலையில் சிக்கும் நபர்களை மீட்பது குறித்து மெரினாவில் உயிர் காக்கும் பிரிவினர் ஒத்திகை: கடலோர காவல் படையுடன் இணைந்து போலீசார் நடத்தினர்

சென்னை: கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் நபர்களை மீட்கும் வகையில் கடலோர காவல் படையுடன் இணைந்து சென்னை மாநகர காவல்துறை, தீயணைப்பு துறை சார்பில் உயிர் காக்கும் ஒத்திகை நிகழ்ச்சி மெரினா கடற்கரையில் நடைபெற்றது. மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது நீரில் மூழ்கி அவ்வப்போது இறக்கும் நிலை உள்ளது. இதை, தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடலோர பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், சென்னை மாநகர காவல் துறை, தீயணைப்பு துறை, கடலோர காவல் படையுடன் இணைந்து ‘மெரினா உயிர் காக்கும் பிரிவு’ ஒன்றை கடந்த ஆண்டு 20.10.2021ம் தேதி தொடங்கியது. இந்த பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்ற காவலர்கள் மீட்பு பணியின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாலை மெரினா கடந்கரையில் உள்ள நீச்சல் குளம் பின்புறம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின்போது, காவலர்கள் எச்சரிக்கையை மீறி சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கியவர்களை பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் எப்படி மீட்கின்றனர் என்று ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. அதேபோல், நடுக்கடலில் மீன் பிடிக்கும் சென்றபோது கரை திரும்பும் போது மோட்டார் இஞ்சின் பழுதாகிவிட்டதால் கடலோர பாதுகாப்பு குழுமத்தினரை அவசர உதவி எண் 1093 எண்ணிற்கு கைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் போது கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தவுடன் காவலர்கள் அதிநவீன படகு ஓட்டுனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்த படகை பாதுகாப்புடன் மீட்டு கரைக்கு கொண்டு வருவது போல ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

மீனவர்கள் கட்டு மரத்தில் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்து தத்தளித்து கொண்டிருப்பவர்களை பாதுகாப்பு உபகரணங்களுடன் காப்பாற்றுவது, கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி அடித்து  செல்லப்பட்டு காணாமல் போன நபரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை சேர்ந்த சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் கடலில் மூழ்கி மீட்பதும், கடல் அலையில் சிக்கி சுயநினைவு இழந்தவரை மீட்டு முதலுதவி அளிப்பது போன்ற ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்கள் முன்னிலையில் உயிர் காக்கும் பிரிவினர் செய்து காட்டினர்.

Related Stories: