பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேச்சு

சென்னை: இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பேசிய பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் கொண்டு வந்திருக்கக்கூடிய இந்தத் தனித் தீர்மானத்தின் மீது, பாரதீய ஜனதா கட்சியைத் தவிர்த்து, இந்த அவையிலே இருக்கக்கூடிய மற்ற எல்லாக் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளும், தலைவர்களும் இங்கே வரவேற்றுப் பேசி, இந்தத் தீர்மானத்திற்கு ஒரு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தந்திருக்கிறார்கள்.  

அதற்காக முதலிலே நான் அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்தத் தீர்மானம் தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வினைப் பிரதிபலிப்பதாக இருப்பதால், இந்தப் பொது நுழைவுத் தேர்வினை இரத்து செய்திட வேண்டுமென்று எட்டரை கோடி தமிழ் மக்களின் சார்பிலே ஒன்றிய அரசை இந்த மன்றத்தின் வாயிலாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழக மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்காத வகையிலே, ஒன்றிய அரசு பொது நுழைவுத் தேர்வினை இரத்து செய்திட வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டு வரப்பட்டிருக்கக்கூடிய இந்தத் தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டு அமைகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: