ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கண்காணிப்பு குழு கூட்டம் நாளை நடைபெறும்: அரசு அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் வருகிற 12ம் தேதி (நாளை) நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வரை தலைவராக கொண்டு நிதித்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோருடன் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை, மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கடந்த ஆண்டு ஆக.19ம் தேதி முதல் கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அதன் அடுத்த கூட்டம் வருகிற 12ம் தேதி (நாளை) மாலை 6.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10வது தளத்தில் உள்ளக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின், அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: