நெல்லை : சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் அமலை செடிகள் ஆக்கிரமிப்பு காரணமாக நீர் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஆற்றில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு நாட்கணக்கில் முகாமிட்டுள்ள மரக்கிளைகளை அகற்றிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை பூங்குன்றத்தில் தோன்றி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கும் தாமிரபரணி நதியின் நீண்ட பயணத்தில் சீவலப்பேரிக்கு முக்கிய பங்குண்டு. முக்கூடல் என அந்நாளில் அழைக்கப்பட்ட இப்பகுதியில் சிற்றாறும், கோதண்டராமநதியும் இணைந்தன. வளமான ஆற்றுப்படுகையை கொண்ட சீவலப்பேரி பகுதியில் இருந்து உறைகிணறுகள் அமைத்து கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.