சம்பள பாக்கி தொடர்பாக 3 ஆண்டுக்கு பிறகு வழக்கு தொடரலாமா? நடிகர் சிவகார்த்திகேயன் தரப்புக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: ‘சம்பள பாக்கி தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன்’ என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு வழங்க வேண்டிய தொகையை தரும் வரை ஞானவேல் ராஜா படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரினார்.

இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானவேல் ராஜா சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து தற்போது  நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து ஏன் மனுத்தாக்கல் செய்தீர்கள் எனவும் டி.டி.எஸ். விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒரு மனு நிலுவையில் இருக்கும்போது மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பிற்கு கேள்வி எழுப்பி வழக்கின் விசாரணை வரும் 13ம் தேதி தள்ளிவைத்தார்.

Related Stories: