கோடைகாலம் துவங்கியதால் மக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்களை அமைக்க தொண்டர்களுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: கோடைகாலம் துவங்கி உள்ளதால் மக்களின் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை அமைக்குமாறு தொண்டர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; கோடைகாலம் துவங்கி இருக்கும் நிலையில் கோடையின் உச்சி வெயிலை நினைவு படுத்தும் அளவிற்கு, இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெயிலின் அளவு அதிகரித்துள்ளது.

எனவே தமிழக மக்கள் இந்த கோடை காலத்தை சமாளிப்பதற்கு தேமுதிக சார்பில் நம்மால் இயன்ற உதவிகளை செய்திட வேண்டும். ஆண்டு தோறும் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் மக்களுக்கு உதவிட, தண்ணீர் பந்தல்கள் அமைத்து தங்களால் இயன்ற அளவிற்கு உதவுவது வழக்கம்.

அதேபோல் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகர பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்றவைகளை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த சீரிய பணிக்கு என்றும் போல் எனது இதயமார்ந்த வாழ்த்துக்கள் உண்டு. இக்கோடைகாலம் முழுவதும் இப்பணியினை செயல்படுத்த வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: