விராலிமலை வயலோகத்தில் ஒரே இடத்தில் சிக்கிய 3 மலைப்பாம்புகள்

விராலிமலை : விராலிமலை வயலோகம் கிராமத்தில் ஒரே இடத்தில் பின்னிப் பிணைந்து கிடந்த 3 மலைப்பாம்புகளை தீயணைப்புத்துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் கிராமத்தின் சீரணி அரங்கத்தின் பின்புறம் உள்ள புது குளக்கரையில் நேற்று (திங்கள்கிழமை) நடந்து சென்றவர்களுக்கு வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சத்தம் கேட்ட திசையில் சிலர் சென்று பார்த்தபோது மூன்று மலைப்பாம்புகள் ஒன்றோடு ஒன்றாக பின்னிக்கொண்டு கிடந்ததைக் கண்ட சிலர் ஊர் மக்களுக்கு தகவல் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து நிகழ்விடம் வந்த தீயணைப்பு துறையினர், மூன்று மலைபாம்புகளையும் லாவகமாக பிடித்து தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தப் பகுதிகளில் இதுபோல் அடிக்கடி மலைப்பாம்புகள் பிடிக்கப்படுவதும் அதை தீயணைப்புதுறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் மலைப்பாம்புகளை வனத்துறையினர் காப்புக்காட்டில் தான் கொண்டு விடுகிறார்களா இல்லை வழியிலேயே ஏதாவது ஒரு காட்டுப்பகுதியில் அவிழ்த்துவிட்டு விடுகிறார்களா? அவ்வாறு அவிழ்த்துவிடப்படும் மலைப்பாம்புகள் தான் மீண்டும் ஊருக்குள் சுற்றி வருகிறதோ என்ற கேள்வி தற்போது பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

Related Stories: