காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி பிரேசில் செல்லும் வீரர்களுக்கு அரசு சார்பில் விமான கட்டணம்: முதல்வர் உத்தரவு

சென்னை: காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக பிரேசில் செல்லும் வீரர்களுக்கான விமான கட்டணத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.  பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி வரும் மே மாதம் 1ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் சமீஹா பர்வீன்(நீளம் தாண்டுதல்), ஆர்.சினேகா(நீச்சல்), ஜெர்லின் அனிகா(இறகுப்பந்து தனிநபர்) மற்றும் வீரர்கள் கே.மணிகண்டன்(நீளம் தாண்டுதல்) ஆர்.சுதன் (மும்முனை தாண்டுதல்), பிரித்வி சேகர்(டென்னிஸ் தனிநபர்) ஆகிய 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 இதனை தொடர்ந்து வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர் கடந்த 22ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது பிரேசில் செல்ல அரசின் சார்பில் விமானக் கட்டணம் மற்றும் உதவிகள் செய்திட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அனைவருக்கும் விமானக்கட்டணமாக தலா ₹30ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்று திரும்பும் வரையில் தகவல் தொடர்பு கொள்ளவும் வசதியாக வாட்ஸ்அப் குரூப் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Related Stories: