காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற யதோக்தகாரி பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி பிரம்மோற்சவ விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு விழா, இன்று அதிகாலை 5.45 மணி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு யதோக்தகாரி பெருமாளுக்கும், கோமளவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின்போது, பெருமாள் சப்பரம், ஹம்ச வாகனம், கருட சேவை, சேஷ வாகனம், தங்க பல்லக்கு, திருத்தேர் உற்சவம், ஆள்மேல் பல்லக்கு, தொட்டி திருமஞ்சனம், தீர்த்தவாரி, த்வாதசாராதனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு கோலங்களில் காலை, மாலை நேரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இதைத்தொடர்ந்து இரவில் பேரீதாடனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, அனுமந்த வாகனம், சந்திரபிரபை, யாளி வாகனம், யானை வாகனம், திருத்தேரில் எழுந்தருளி திருமஞ்சனம், குதிரை வாகனம், வெட்டிவேர் சப்பரம், த்வஜ அவரோஹனம், புஷ்ப பல்லக்கு போன்ற கோலங்களில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஏற்பாடுகளை பரம்பரை கோயில் நிர்வாக தர்மகத்தா நல்லப்பன் நாராயணன் குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: