ஊத்துக்கோட்டை அருகே கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்: மாணவர்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. 260 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 12 ஆசிரியர்கள் வேலை பார்த்தனர். தற்போது 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதில், 6 முதல் 8ம் வகுப்பு வரை 4 ஆசிரியர்களும், 10ம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். தற்போது, சில வாரங்களில் 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளது. அதனால் போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். எனினும், மனு மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், டிஎஸ்பி சாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தி, ‘ஆசிரியர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கிறோம், பள்ளி சுற்றுச்சுவர் கட்டி தரப்படும்’ என உறுதியளித்தனர். இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு, மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: