சென்னை: சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின் போது அரக்கோணம் எம்எல்ஏ ரவி (அதிமுக) பேசுகையில் ‘‘ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 2 மாணவிகள் உடல்நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாதிப்பு, தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாலா அல்லது வேறு ஏதோ காரணத்தினாலா என்பது குறித்து ஆராய வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: ராணிப்பேட்டை மாவட்டம், எத்திராஜ் அம்மாள் முதலியாண்டான் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் 17 வயது, ஆர்.யோகலட்சுமி மற்றும் அதே பள்ளியில் படித்து வரும் 15 வயது பி.பிரியதர்ஷினி என்பவர்கள் கடந்த ஜனவரி 4ம் தேதி மற்றும் பிப்ரவரி 2ம் தேதி கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். தடுப்பூசி அளிக்கப்பட்டவுடன் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.