சென்னை: நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியை சார்ந்த புதிய நிர்வாகிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியை சார்ந்த தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன், மனோபாலா, கோவை சரளா, நடிகை லதா உள்ளிட்ட வெற்றிபெற்ற நிர்வாகிகள் முதல்வரை தலைமை செயலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.