செய்யாறு அருகே அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியர் கைது

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பரிதிபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(57). செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 24 மற்றும் 20 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ராமலிங்கம் கடந்த சில நாட்களாக அவர் பணிபுரியும் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவியை மிரட்டி வந்தாராம். தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராமலிங்கத்தை நேற்று கைது செய்து போளூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: