கடந்த 9 மாதங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2400 கோடி சொத்துகள் மீட்பு.! அமைச்சர் சேகர்பாபு பேட்டி

பெரம்பூர்: ஓட்டேரி விநாயகர் கோயிலில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 9 மாதங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2400 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை ஓட்டேரியில் உள்ள விநாயகர் கோயிலில் இன்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:தமிழகத்தில் பராமரிப்பு பணி மற்றும் குடமுழுக்கு நடைபெறாத கோயில்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

இதன் தொடர்ச்சியாக 100க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. திருக்கோயில்களில் தெய்வங்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன. முன்பு ரூ.1000 கோடி அளவிலான கோயில் நிலங்கள் மீட்போம் என தெரிவித்தோம். தற்போது ரூ.2400 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம். 500க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த மானிய கோரிக்கையில் வெளியான 112 அறிவிப்புகளில் 80 சதவீத பணிகளுக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோயில் திருப்பணிகளுக்கு ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் அறிக்கையை பெற்று, தமிழக முதல்வரிடம் வழங்கி, சிதம்பரம் நடராஜர் கோயிலை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் பிரச்னைகள், முறைகேடுகள் குறித்து விசாரிக்க, துணை ஆணையர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை கிடைத்ததும், யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Related Stories: