சென்னை: சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: வேளாண் பட்ஜெட்டில் தனி நிதி ஒதுக்கீடு செய்திருந்தால்தான் பெரிய, பெரிய திட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளுக்குப் பலன் அளிக்கும். ஆனால் இந்த வேளாண் பட்ஜெட் உண்மையிலேயே விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கின்ற பட்ஜெட்டாக தான் பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஏழை குடும்பத்திலே பிறந்த பெண்கள், திருமண வயதை எட்டுகின்ற பொழுது, பொருளாதார சூழ்நிலையின் காரணமாக திருமணம் செய்ய இயலாமல் தடைபடுகிறது. அந்த தடையை நீக்கவேண்டும் என்பதற்காகதான் தொலைநோக்கு சிந்தனையோடு திருமண உதவித்திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து 25 ஆயிரம், 50 ஆயிரம் அளித்தார். தாலிக்கு தங்கம் முதற்கட்டமாக 4 கிராம் என அறிவித்தார். பிறகு 8 கிராமாக உயர்த்தினார்.