மொபட் மீது லாரி மோதி கணவன் கண் எதிரே மனைவி பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே மொபட் மீது லாரி மோதி கணவன் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பூந்தமல்லி அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் கஜேந்திரன் (45). கறி கடை நடத்தி வருகிறார். இவரது, மனைவி ராஜம்மாள் (40). நேற்று காலை நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலுக்கு கறி கொடுத்துவிட்டு, இருவரும் மொபெட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலை, நசரத்பேட்டை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி வேகமாக மொபெட் மீது மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில், சம்பவ இடத்திலேயே ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார். கஜேந்திரன் காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கஜேந்திரன் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  தலைமறைவான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். கணவன் கண் எதிரே மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: