நடிகர் சிம்பு தொடர்ந்த மான நஷ்ட வழக்கு!: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்..!!

சென்னை: நடிகர் சிம்பு தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. திரைப்பட தயாரிப்பாளர் மைக்கேல் நாயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016ல் வெளியான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு 8 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருந்தது. ஆனால் பட தோல்வியால் ரூ.1.51 கோடி மட்டுமே சம்பளம் வழங்கியதாகவும், சம்பள பாக்கி 6 கோடி ரூபாயை பெற்று தருமாறும் நடிகர் சங்கத்தில் சிம்பு புகார் மனு அளித்திருந்தார்.

அதேசமயம் படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தர வேண்டும் என்று சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இணையதளத்தில் தன்னை பற்றி மைக்கேல் ராயப்பன் அவதூறு செய்தி பரப்பியதாக கூறி ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராயப்பனுக்கு எதிராக சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யாமல் தாமதம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  1008 நாட்கள் ஆகியும் வழக்கில் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யாததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பதாக நீதிபதி ஆணையிட்டார். இந்த அபராத தொகையை வரும் 31ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். பிரதான வழக்கின் விசாரணை ஏப்ரல் 1ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: