குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானதை எதிர்த்த பப்ஜி மதன் மனுமீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது; சென்னை ஐகோர்ட் அமர்வு உத்தரவு

சென்னை:  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுமீது தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதன்குமார் தனது டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல்,  தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 18ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த ஆண்டு ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பப்ஜி மதன் என்கிற மதன் குமார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 8 மாதங்களாக மனுதாரர் சிறையில் இருப்பதால், மதன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசுவது மிகவும் ஆபத்தானது. அதனால் தற்போது இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: