கரந்தை தமிழ் சங்க தலைவர் ராமநாதன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: கரந்தைத் தமிழ்ச் சங்க தலைவர் ராமநாதன் மறைவிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், இந்நாள் தலைவருமான, கரந்தைத் தமிழ்ச் செம்மல் ராமநாதன் வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். பல்வேறு கல்வி நிலையங்களை நிறுவிய அவர், 1983ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டு வரை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், 2000ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுவரை செயலாளராகவும் பணியாற்றியவர். பின்னர், 2021ம் ஆண்டு முதல் மீண்டும் தலைவராகப் பணியாற்றத் தொடங்கிய அவர், கரந்தைத் தமிழ்ச் செம்மல், செயல் மாமணி, செம்மொழி வேளிர் முதலிய விருதுகளைப் பெற்றவர். ஈடுசெய்ய முடியாத அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: