சென்னை: சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்க கூட்டரங்கில், விளையாட்டு துறை மேம்பாடு, சர்வதேச தரம் வாய்ந்த நவீன வகையிலான விளையாட்டு அரங்கங்கள் உருவாக்குதல் மற்றும் வீரர், வீராங்கனைகள் நலன் குறித்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை செயலாளர் அபூர்வா, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது:தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டில் சர்வதேச அளவில் சாதனை படைக்க வேண்டும், விளையாட்டு துறையினை மேம்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் அனை த்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட முற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.