கழுகுமலை: கழுகுமலை அருகே காட்டுப் பகுதியில் முதியவர் சடலத்தை எலும்புக்கூடாக மீட்டுள்ள போலீசார், இறந்தவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கே. துரைச்சாமிபுரத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் பணி கடந்த இரு நாட்களாக நடந்து வருகிறது. நேற்று காலை இயந்திரம் மூலம் அறுவடை பணி மேற்கொண்டபோது துரைசாமிபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமியின் மக்காச்சோளம் பயிரிட்ட காட்டுப் பகுதியில் மனித எலும்புக் கூடு கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் விஏஓ கணேசன் மற்றும் கழுகுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.