கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டாம்கட்ட நெல் அறுவடை பணி தீவிரம்-விளைச்சல் குறைவால் விவசாயிகள் சோகம்

கம்பம்/தேவதானப்பட்டி : கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் தேவதானப்பட்டி பகுதியில் நெல் அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தின் இரண்டாம் நெற்களஞ்சியமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விளங்குகிறது. கூடலூர் முதல் வீரபாண்டி வரை சுமார் 14700 ஏக்கர் பாசனப்பரப்பில் தேனி மாவட்டம் முழுவதும் நெல் பயிரிடப்பட்டு வருடம் இரண்டு போக நெல் சாகுபடியும், ஊடு பயிர் ஒன்றும் என மும்போகம் விளைவிக்கப்படுகிறது. முல்லை பெரியாற்று நீரால் செழித்து விளங்கும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த வருடம் ஜூன் முதல் தேதி முதல் தமிழக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. கடந்த அக்டோபர் மாதம் முதல்கட்ட சாகுபடி நடந்தது.

அதன் பின் இரண்டாம் கட்ட சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வமாக களம் இறங்கினர். அதன் பயனாக கடந்த ஒரு வாரமாக கம்பத்தை சுற்றியுள்ள சுருளிப்பட்டி, கே.கே.பட்டி பகுதிகளில் உள்ள வயல்களில் இரண்டாம் கட்ட நெல் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த அறுவடையுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் கட்ட அறுவடைக்கு நெல் விளைச்சல் குறைவாக உள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

குழி ஒன்றுக்கு 60 மூட்டைகள் வரை போன தடவை விளைந்த நெற்கதிர்கள் இரண்டாம் சாகுபடியில் குழிக்கு 30 முதல் 40 மூட்டை மட்டுமே விளையும். மேலும் கடந்த முறை 62 கிலோ எடையுள்ள நெல் மூட்டை ரூ.1200 வரை விலை போனது. ஆனால் இம்முறை ரூ.850 முதல் 900 வரை விற்பனை ஆவதாக கூறுகின்றனர். மேலும் வெளி மாநிலங்களில் அதிகளவில் இன்னும் விற்பனை செய்யவில்லை. வெளி மாவட்டங்களுக்கு மட்டுமே நெல் வியாபாரிகள் நெல்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் விலை ஏற்றம் இல்லை என்றனர்.

இதேபோல் பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் தேவதானப்பட்டி அருகே வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் கண்மாய்கள் மற்றும் வாய்க்கால் பாசனம் மூலம் பாசன வசதி பெறுகிறது. இந்த பகுதியில் சுமார் மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: