ஆண்டிபட்டி அருகே வேன் - கார்கள் மோதிய விபத்தில் மதுரையை சேர்ந்த 4 பேர் பலி-பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே வேன் மற்றும் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மதுரையைச்சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.மதுரை மாவட்டம், செக்கானூரணியை சேர்ந்தவர் சிவபாண்டி (48). இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (55), பாண்டியராஜன் (44) உள்ளிட்ட 3 பேருடன் தேனி மாவட்டம், கம்பத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று காரில் சென்றார். காரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த முருகபிரபு (44) ஓட்டி சென்றார். நிகழ்ச்சி முடிந்து மாலையில் மீண்டும் செக்கானூரணிக்கு திரும்பினர்.

ஆண்டிபட்டியை அடுத்துள்ள கணவாய் பகுதி திம்மரசநாயக்கனூர் விலக்கு அருகே மாலை 5.10 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. பின்னர், அந்தக் காருக்கு பின்னால் வந்த சுற்றுலா வேன் மீதும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 கார்களும் அப்பளம் போல் நொறுங்கின. காரை ஓட்டி வந்த முருகபிரபு சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார்.

கார்கள் மற்றும் வேனில் வந்தவர்கள் படுகாயமடைந்தனர்.தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிவபாண்டி, செல்வம், ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டியைச்சேர்ந்த ராமசந்திரன்(47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பாண்டியராஜன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கார் மற்றும் வேனில் பயணம் செய்த பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிலரை, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து காரணமாக தேனி - மதுரை சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே சாலை விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: