சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நில அளவையர் மற்றும் அது சார்ந்த பணியிடங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொருபுறம் அப்பணிகளை தனியார் மேற்கொள்வதற்காக நில அளவையர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் நில நிர்வாக ஆணையரும், இயக்குனரும் பரிந்துரைத்துள்ள மாற்றங்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், நில அளவை மற்றும் அது சார்ந்த பணிகளில் உள்ள 7000 பணியிடங்கள் ஒழிக்கப்படும்.
அரசு ஊழியர்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தருணங்களில் வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழக அரசில் புதிதாக 2 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கு நேர்மாறாக வேலைவாய்ப்புக்கான நடைமுறைகளை மாற்றுவதற்கும் அதிகாரிகள் முயலக்கூடாது. இந்த விவகாரத்தில் முதல்வரும், வருவாய்த்துறை அமைச்சரும் தலையிட்டு, நில அளவை பணியாளர் நலனுக்கு எதிரான மாற்றங்களை தடுக்க வேண்டும்; இதே நிலை தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.