கொளத்தூர் தொகுதியில் வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பிய நபர்களுக்கு வலை

பெரம்பூர்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நேற்று நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு. பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில். சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 64வது வார்டில் உள்ள சில வாக்குச்சாவடிகளை திமுகவினர் கைப்பற்றப்போவதாக, நேற்று மதியம் ஒரு மணி அளவில் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி பரவியது.

திட்டமிட்டே திமுகவினர் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுவதாக திமுகவினர் குற்றம்சாட்டினார். மேலும், வாட்ஸ்அப்பில் வெளியான செய்தியில் வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். ஆனால், வாக்குச்சாவடியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.விசாரணையில், வாட்ஸ்அப்பில் வெளிவந்த தகவல் மாற்று கட்சியினர் வேண்டுமென்றே திமுகவினருக்கு எதிராக சித்தரித்தது தெரியவந்தது. பொய் செய்தி பரப்பிய நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: