சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையனுக்கு பரோல் வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் ஈரோட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு ஒன்றில் 1987ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதித்து 1997ம் ஆண்டு ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி 34 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்தபோது தந்தை மாதையனையும் விடுவிக்கக் கோரி அவரது மகள் ஜெயம்மாள் கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.