சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையனுக்கு பரோல் கோரி மகள் வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையனுக்கு பரோல் வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தன கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் ஈரோட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு ஒன்றில் 1987ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த வழக்கில் மாதையனுக்கு ஆயுள் தண்டனை விதித்து 1997ம் ஆண்டு ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி 34 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்தபோது தந்தை மாதையனையும் விடுவிக்கக் கோரி அவரது மகள் ஜெயம்மாள் கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.

ஆனால், முன்கூட்டி விடுதலை செய்ய அரசு மறுத்த நிலையில் தன் தந்தையின் இதய நோய் கோளாறுக்கு சிகிச்சை பெற 30 நாட்கள் பரோல் கேட்டு ஜெயம்மாள் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, தனது கோரிக்ைக மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும்  தந்தைக்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயம்மாள் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.என்.மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக உள்துறை செயலாளர், சிறைத் துறை டிஜிபி, சேலம் சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் 2 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Related Stories: