சேப்பாக்கத்தில் திமுக வேட்பாளரின் போஸ்டர் கிழிப்பு அதிமுக நிர்வாகிகள் 2 பேர் கைது

சென்னை: சேப்பாக்கத்தில் திமுக வேட்பாளரின் போஸ்டர் கிழித்த விவகாரத்தில் அதிமுகவை சேர்ந்த 2 நிர்வாகிகள் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.சென்னை சேப்பாக்கம் 114வது வார்டு திமுக வேட்பாளராக மதன்மோகன் நிற்கிறார். இதனால் அரசு அனுமதி பெற்ற இடங்களில் இவரது போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திமுக வேட்பாளரின் போஸ்டரை அதிமுக சிறுபான்மை பிரிவு பகுதி செயலாளர் சம்சுதீன் (39), 115வது அதிமுக இளைஞர் பாசறை வட்ட செயலாளர் ஆசிப் (18) ஆகியோர் கிழித்துள்ளனர். இதை பார்த்த திமுக உறுப்பினர் தனுஷ் என்பவர் இருவரையும் தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 2 அதிமுகவினரும் தனுஷை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த தனுஷ் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். பின்னர் தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகிகள் மீது தனுஷ் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திமுக உறுப்பினர் தனுஷை அதிமுக நிர்வாகிகளான ஆசிப், சம்சுதீன் ஆகியோர் தாக்கியது உறுதியானது. அதைதொடர்ந்து இருவர் மீதும் ஐபிசி 147, 294(பி), 324, 341, 506(1)ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: