×

பெண்களின் உரிமைகளை எடுத்துரைக்கும் பிங்க் லீகல்!

நன்றி குங்குமம் தோழி

பெண்கள் கல்லூரிக்கு வேலைக்கு என வெளியில் செல்ல அதிகம் பயன் படுத்துவது அரசுப் பேருந்துகளையும் ரயில்களையும்தான். பெண்கள் இப்படி பயணம் செய்யும் போது பாலியல் சீண்டலுக்கு உள்ளாவது இன்று வழக்கமான காட்சியாகிவிட்டது. மக்களும் இதை எளிமையாக கடந்துபோகக் கற்றுக்கொண்டனர். பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் மறுநாள் அதே பேருந்தில், தங்கள் துன்பத்தையும் மீறி பயணம் செய்துகொண்டுதான் இருக்கின்றனர். பொது இடங்
களில் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால், பெண்கள் சுதாரிப்பதற்குள் சுலபமாக தப்பித்துவிட முடியும் என்ற நம்பிக்கையிலும், பொதுவாக பெண்கள் இது போன்ற நேரங்களில் சட்டரீதியாக எந்த புகாரும் அளிக்காமல் அமைதியாய் இருந்துவிடுவது பாலியல் குற்றவாளிகளுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட தைரியமளிக்கிறது.

மானசி சவுத்ரி, ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர். தில்லியில் தனது சட்டப்படிப்பை முடித்ததும், 2018ஆம் வருடம் இந்தியச் சட்டத்தில் முக்கிய நிகழ்வுகளான சட்டப் பிரிவு - 377, சபரிமலைக் கோயிலுக்குள் பெண்களின் அனுமதி மற்றும் தண்டனை சட்டம் 497 நீக்கல் போன்ற இந்தியச் சட்ட அமைப்பில் முக்கிய தீர்ப்புகளைக் கொண்டுவர காரணமாக இருந்த நீதிபதி சந்திர சூட்டின் உதவியாளராய் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி உள்ளார். இதன் பின், ஹைதராபாத்தில், மானசி பெண்கள் மத்தியில் ஒரு கணக்கெடுப்பை நடத்தினார். அதில் 90 சதவீத பெண்களுக்கு தங்களின் உரிமைகளும் சட்டங்களும் தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும், இதில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருமே நன்கு படித்த நகரத்தில் வசிக்கும் பெண்கள். இந்த ஆராய்ச்சியின் முடிவில், பெண்களுக்கு எதிராகப் பல குற்றங்கள் தொடர்ந்து நடக்க முக்கிய காரணமாக அவர்களின் அறியாமையும் இருக்கிறது என்று உணர்ந்தார்.

பெண்கள் தங்கள் உரிமைகளையும் சட்டங்களையும் நன்கு அறிந்தால், அவர்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களைத் தைரியமாக எதிர்கொள்வார்கள் என்றும் தங்களைப் போன்ற பெண்கள் பலருக்கு உதவுவார்கள் என்ற நோக்கத்தில், பிங்க் லீகல் என்ற பெண்களின் சட்டங்களையும் உரிமைகளையும் விவரிக்கும் இந்தியாவின் முதல் வலைத்தளத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆண்டு பெண்கள் தினத்தில் வெளியிடப்பட்ட இந்த வலைத்தளம், குறுகிய காலகட்டத்திற்குள்ளேயே பெண்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இதில் பாலியல் வன்முறை, வன்கொடுமை, சொத்துரிமை, திருமணம் - விவாகரத்து, சைபர் க்ரைம், மகப்பேறு போன்ற பல சட்டதிட்டங்களுக்கான விவரங்கள் கிடைக்கும். வழக்கறிஞர் மானசி பெண்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய உரிமைகள்/சட்டங்களாக ஐந்து குறிப்புகளை கூறுகிறார்:

1. திருமணமான பெண்களை, அவர்களின் புகுந்த வீட்டிலிருந்து வெளியேற்ற யாருக்கும் உரிமை கிடையாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது கணவர் / கணவரின் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வீட்டில் வாழ உரிமை உண்டு. கணவனோ அல்லது அவரது குடும்ப உறுப்பினருக்கும் கூட அந்த பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்ற அதிகாரம் இல்லை. அந்த வீடு அப்பெண்ணின் பெயரில் இல்லாவிட்டாலும் அங்கு வாழ அப்பெண்ணிற்கு அனைத்து உரிமையும் உண்டு. மீறினால் வன்கொடுமை சட்டத்திற்குக் கீழ், பெண்கள் வழக்குப் பதிவு செய்யலாம்.

2. ஒரு பெண்ணின் சொத்து (பணம், நகைகள், ரியல் எஸ்டேட் போன்றவை) ஸ்ட்ரிதன் என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பெண் தனது ஸ்ட்ரிதனின் முழுமையான உரிமையாளர். அவளுக்கு அதன் மீது முழுமையான கட்டுப்பாடு உள்ளது. ஸ்ட்ரிதன் வேறொருவருடன் வைத்திருந்தாலும் (குடும்ப உறுப்பினர்களுடன் வைக்கப்பட்டிருந்தாலும்), அது பெண்ணுக்கு மட்டுமே சொந்தமானது.

3. பாலியல் துன்புறுத்தல்கள் உடல் ரீதியானது மட்டுமில்லை. தகாத வார்த்தைகளும் சைகைகளும் பாலியல் வன்முறைதான். பாலியல் ரீதியான ஜோக்குகள் மூலம் ஒரு பெண்ணை சங்கடப்படுத்துவதும் குற்றம்தான். பெண்ணின் விருப்பமில்லாமல் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், வார்த்தையும், சைகை களும் சட்டப்படி குற்றமாகும்.
 
4. கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு சட்டப்படி தங்கள் பணியிடத்திலிருந்து 26 வாரங்கள் சம்பளத்துடன் விடுமுறை எடுத்துக்கொள்ள உரிமையுண்டு. மகப்பேறு கால விடுமுறை சட்டத்தின்படி, 26 வாரங்களில் பிரசவத்திற்கு முன் அதிகபட்சமாக ஆறு வாரங்களும், மீதம் இருக்கும் விடுமுறை நாட்களை பிரசவத்தின் போதும், அதற்கு பிறகும் எடுத்துக்கொள்ளலாம். மேலும், பிரசவத்தின் போது ஏற்படும் சில சிக்கல்கள், அதற்குப் பின் எழும் நோய்கள் அல்லது கருச்சிதைவு போன்ற காரணங்களுக்காகக் கூடுதலாக ஒரு மாத காலம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்பட வேண்டும். இச்சமயத்தில் அந்த பெண்ணை வேலையிலிருந்து நீக்கவோ அல்லது தனது பதவியிலிருந்து குறைக்கவோ கூடாது.

5. சைபர் புல்லியிங், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடகங்களின் வாயிலாக ஒருவரின் விருப்பமின்றி கொடுக்கப்படும் தொந்தரவுகள், துன்புறுத்தல்கள் என அனைத்துமே இதில் அடங்கும். ஆன்லைனில் ஒருவரைக் குறித்த தவறான பதிவுகள் உருவாக்கி, ஒருவரைக் குறிவைத்து தாக்குவது முதல், ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்கள், காணொளிகளை வெளியிடுவது அல்லது வெளியிடப்போவதாக மிரட்டி பயமுறுத்துவது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும். இதை சைபர் க்ரைம் துறையிடம் முறையிட்டால் உடனடி உதவி கிடைக்கும். இப்படி பெண்கள் தெரிந்திருக்கவேண்டிய முக்கிய உரிமைகளை கூறிய வழக்கறிஞர் மானசி, இதில் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தைப் பாதுகாத்து அதே சமயம் அவர்களுக்கு சட்ட ரீதியாக உதவி செய்யும் சலுகையும் நம் சட்டதிட்டத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

‘‘நம் இந்தியச் சட்டதிட்டத்தில் பெண்களைப் பாதுகாக்கச் சிறப்பு உரிமைகளும், சட்டங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெண்கள் பலருக்கும் இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் அறியாமையால் பல குற்றங்களுக்கு ஆளாகின்றனர்” என்று தெரிவித்தார். “பெண்கள் தங்களுக்கு நிகழும் குற்றங்களை முடிந்த வரையில் உடனடியாக புகார் அளிப்பதன் மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வழங்க முடியும். காலம் தாழ்த்தும் போது ஆதாரங்கள் இல்லாமல் அல்லது அழிக்கப்பட்டு விடுகின்றன. புகார் அளிக்கும் நிலையில் இல்லாத பெண்கள் முதலில் ஆதாரங்களையாவது பாதுகாத்து, பின்னர் தகுந்த நேரத்தில் புகார் அளிக்க வேண்டும்” என்கிறார். பெண்கள் புகாரளிக்க முன்வந்தாலும் அவர்களின் குடும்பமும் நண்பர்களும் அவர்களை தடுத்துவிடுகின்றனர். பெண்கள் எப்போதுமே சகித்துப் போகவேண்டும் என்றுதான் இந்த சமூகம் விரும்புகிறது.

அதனால்தான் இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை சாதாரணமாக கடந்துபோக முடிகின்றது. தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கையும் தண்டனைகளும் வழங்கப்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் பிங்க் லீகல். இதன் மூலம் பெண்கள் சட்ட ரீதியாக எப்படி அணுகவேண்டும் என்பதில் தொடங்கி அவர்களுக்கு உதவியாய் நிற்க சட்டக்குழு தயாராய் இருக்கிறது. இவர்களது இணையதளத்தில் இணைந்ததும், தொடர்ந்து நமக்குப் பெண் உரிமை - பெண் சட்டம் குறித்த விவரங்கள் எளிய மொழியில் அனைவருக்கும் புரியும் விதத்தில் அனுப்பப்படும். மேலும், அவர்களது வலைத்தளத்தில் தொடர்ந்து பல தகவல்களைப் புதுப்பித்தும் வருகின்றனர்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!