புதுடெல்லி: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் விசாரணையை வேறு தேதிக்கு கண்டிப்பாக மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டத்தை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, பாமக, தலைவர் ரமதாஸ், வேல்முருகன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், எழுத்துப்பூர்வ தங்கள் வாதங்களை தொகுத்து வழங்கும்படி கடந்தாண்டு டிசம்பர் 16ம் தேதி உத்தரவிட்டது.