முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைப்பு

டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவ மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து எய்ம்ஸ்  மருத்துவக் குழுவை அமைத்தது. எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமகையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி 2016-ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 5-ம் தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்த நிலையில் விசாரணைக்காக ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினரிடமும் ஆணையம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், விசாரணை முடிவடையாத நிலையில், ஆணையத்தின் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவக்குழு நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் குழுவுடன் ஆறுமுகசாமி வருகிற 16ம் தேதி ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

Related Stories: