திருச்சி : திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் முசிறியில் இருந்து நாமக்கல் வரையிலான சாலையை அகலப்படுத்த ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி - சேலம் சாலை அகலம் குறைந்த அதே நேரத்தில் குறுகலான வளைவுகள் அதிகம் உள்ள சாலை என்பதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதை தடுக்க வளைவுகளை நேர் செய்து சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முசிறியில் இருந்து நாமக்கல் வரையிலான உள்ள இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அகலப்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்தது.