கிராமப்புறங்களில் டாஸ்மாக் அமைக்கும் அதிகாரத்தை கலால் துறையிடம் வழங்க விதிகளில் திருத்தமா? தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் கடை அமைப்பதற்கு தடை விதிப்பதற்கு கிராம சபைகளுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக  சென்னை உயர் நீதிமன்றம், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதையடுத்து, இந்த வழக்குகளை மூன்று நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன்,  பி.டி.ஆதிகேசவலு அடங்கிய முழு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, மகாராஷ்டிராவில் மதுபான கடைகள் அமைக்க அனுமதி வழங்கும் அதிகாரத்தை கிராம சபைக்கு வழங்கி சட்டம் இயற்றியதுபோல, தமிழகத்திலும் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும். காந்தியடிகளின் கொள்கையை பின்பற்றும் கிராமத்தில் மதுக்கடைகள் வேண்டாம் என்றால், அவற்றை தொடங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற கிராம சபைக்கு அதிகாரமில்லையா, கடைகள் மூடப்பட வேண்டுமென்றாலும் அரசின் வருவாய் ஆதாரமாக மதுக்கடைகள் இருப்பதால் முழுமையாக அரசு மதுக்கடைகளை கைவிடாது என்றார்.

அப்போது நீதிபதிகள், கிராமசபை தீர்மானம் தொடர்பாக இதுவரை விதிகள் இல்லை. மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து மாநிலஅரசு தான் முடிவெடுக்க முடியும். கடைகளை அமைப்பதில் முடிவெடுக்க கிராம சபைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதால், கடைகள் தொடங்குவது தொடர்பாக பரிந்துரை வழங்கவும் பஞ்சாயத்துக்கு அதிகாரம் இல்லை. தங்கள் கிராமத்தில் மதுக்கடைகள் வேண்டாம் என்று கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. மதுக்கடையை மூட வேண்டும் என்று மட்டுமே அரசுக்கு கோரிக்கை வைக்க அதிகாரம் உள்ளது.

கிராமங்களில் மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக கலால் வரித் துறை முடிவெடுக்கும் வகையில் விதிகளை திருத்த வேண்டும். எங்கு, எவ்வளவு தூரத்தில் கடைகள் தொடங்குவது என்பது குறித்து கலால் வரித்துறை தான் தீர்மானிக்க முடியும். இதுதொடர்பாக விரைவில் விதிகள் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினர். அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, மாநில அரசின் விதிகளில் திருத்தம் கொண்டுவருவது குறித்த அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்றார்.  இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: