* வாலிபர் கைது * பைக் பறிமுதல்
திருப்போரூர்: உணவு டெலிவரி செய்வதுபோல் நடித்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா, பைக் பறிமுதல் செய்யப்பட்டது.பிரபல தனியார் உணவு விநியோக நிறுவனத்தின் டி - சார்ட் அணிந்து ஆன்லைனில், அதன் ஊழியர்போல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு, சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக தாழம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வேலு தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவன ஊழியர்போல் உடை அணிந்து, ஓஎம்ஆர் சாலை நாவலூர் பகுதியில் ஒரு வாலிபர் பைக்கில் சென்றார்.
இதை பார்த்து சந்தேகமடைந்த எஸ்ஐ முத்துகுமார் தலைமை, அவரை மறித்து விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அதிகரித்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ்குமார் சேனாபதி (30) என தெரிந்தது. அவரது பைக்கை சோதனையிட்டதில், 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.