ஆவடி: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து அந்த நோயை கட்டுப்படுத்த அனைவரும் முக கவசம் அணியவேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், அடிக்கடி கைகளை கழுவவேண்டும் என்று தமிழக அரசு அறிவுரை வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 25 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணிந்துசெல்லும் வாகன ஓட்டிகளுக்கு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், நன்றி தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டார்.இதன்படி, மேற்கண்ட காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் நேற்று போக்குவரத்து பிரிவு போலீசார், முக கவசம் அணிந்துசெல்லும் வாகன ஓட்டிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.