தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த காமாட்சிபுரத்தில் சொத்து தகராறில் 50 வயது நபரை வெட்டி கொலை செய்து குப்பைத்தொட்டியில் போட்டு தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளான அவரது சித்தி மற்றும் சொந்த தம்பி உள்ளிட்ட 4 பேரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் காமாட்சிபுரத்தை சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் 2-வது மனைவி ரத்னகிரி அவரது மகன் செல்வகுமார் ஆகியோர் ஆவர். அவர்களுடன் கொலை செய்ய பெட்ரோல் வாங்கி கொடுத்ததாக ரத்னகிரியின் உறவினர் லோகநாதன் அடைக்கலம் கொடுத்ததாக செல்வகுமாரின் நண்பர் செல்வம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். காமாட்சிபுரம் சாலையோரத்தில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் எரிந்து கொண்டிருந்த ஆண் சடலத்தை பெரியகுளம் போலீசார் மீட்டனர். அவர் சிங்காரவேல் என்பவரின் 50 வயது மகன் செந்தில் என்பது உறுதியானது.பல்வேறு மாநிலங்களில் சாமியாராக அலைந்து திரிந்த செந்தில் 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய கையோடு தனது தாயின் பெயரில் இருந்து 4 ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டதாக தெரிகிறது. இதில் பங்கு தராததால் இந்த கொலை நடந்திருப்பது உறுதியாகியுள்ளது.